இஸ்ரயேல் குடும்பத்திற்கு யெகோவா சொல்வது இதுவே:
என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்.
பெத்தேலைத் தேடாதீர்கள்,
கில்காலுக்குப் போகாதீர்கள்,
பெயெர்செபாவிற்குப் பயணப்படாதீர்கள்.
கில்கால் நிச்சயமாக நாடுகடத்தப்படும்,
பெத்தேலும் ஒன்றுமில்லாது போகும்,
இஸ்ரயேலின் யெகோவாவையே தேடுங்கள்,
அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்.
இல்லையெனில் அவர் யோசேப்பின் குடும்பத்தின் வழியாக
நெருப்புபோல் அள்ளிக்கொண்டுபோவார்.
அந்த நெருப்பு எல்லாவற்றையும் சுட்டெரிக்கும்.
அதை அணைக்க பெத்தேலில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
நீதியைக் கசப்பாக மாற்றுகிறவர்களே,
நியாயத்தைத் தரையில் தள்ளுகிறவர்களே, அவரையே தேடி வாழுங்கள்.
அவரே அறுமீன், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியவர்.
இருளை அதிகாலை வெளிச்சமாக மாற்றுகிறவரும்,
பகலை இரவாக மாற்றுகிறவரும் அவரே;
கடலின் தண்ணீரை அழைத்து,
பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறவரும் அவரே,
“யெகோவா” என்பது அவர் பெயர்.
அவர் கோட்டைகளை மின்னல் வேகத்தில் தாக்கி அழித்து,
அரணான பட்டணங்களைப் பாழாக்குகிறார்.
இஸ்ரயேலின் நீங்கள் நீதிமன்றத்திற்கு
குற்றவாளியைக் கொண்டுவருகிறவனை வெறுக்கிறீர்கள்,
உண்மை சொல்கிறவனை உதாசீனம் செய்கிறீர்கள்.
ஏழையை மிதித்து, உங்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி
அவனைப் பலவந்தப்படுத்துகிறீர்கள்.
ஆகையால் கல்லினால் மாளிகைகளைக் கட்டியும்,
அதில் வாழமாட்டீர்கள்,
செழிப்பான திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினாலும்
அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கமாட்டீர்கள்.
உங்கள் மீறுதல்கள் எவ்வளவு மிகுதியென்றும்,
உங்கள் பாவங்கள் எவ்வளவு கொடியதென்றும் நான் அறிவேன்.
நீங்கள் நீதிமான்களை ஒடுக்கி, அவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்குகிறீர்கள்.
நீதிமன்றத்தில் ஏழைக்கு நீதிவழங்க மறுக்கிறீர்கள்.
ஆகையால் அப்படிப்பட்ட காலங்களில் விவேகமுள்ளவன் மவுனமாய் இருக்கவேண்டும்.
ஏனெனில் காலம் மிகக் கொடியதாய் இருக்கிறது.
தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்,
அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்.
சேனைகளின் இறைவனாகிய யெகோவா உங்களோடிருக்கிறார் என்று நீங்கள் சொல்வதுபோலவே,
அவர் உங்களோடிருப்பார்.
தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள்.
நீதிமன்றங்களில் நீதியை நிலைநிறுத்துங்கள்.
ஒருவேளை சேனைகளின் இறைவனாகிய யெகோவா,
யோசேப்பின் மீதியானவர்மேல் இரக்கம் காட்டுவார்.
ஆகையால் யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே:
“எல்லா வீதிகளிலும் புலம்பல் உண்டாயிருக்கும்.
பொது இடங்களிலெல்லாம் வேதனையின் அழுகுரல் உண்டாயிருக்கும்.
அழுவதற்காக விவசாயிகளும்,
புலம்புவதற்காக புலம்பல் வைப்பவர்களும் அழைப்பிக்கப்படுவார்கள்.
திராட்சைத் தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும்.
ஏனெனில் நான் உங்களைத் தண்டித்துக்கொண்டு கடந்துபோவேன்”
என்று யெகோவா சொல்கிறார்.