ஓசியா 12
12
1எப்பிராயீம் காற்றை மேய்கிறான்,
நாள்முழுவதும் கொண்டற்காற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான்.
பொய்களையும், வன்செயல்களையும் பெருகப்பண்ணுகிறான்.
அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்;
எகிப்திற்கு ஒலிவ எண்ணெய் அனுப்புகிறான்.
2யூதாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது.
யாக்கோபின் மக்களை அவர்களுடைய வழிகளுக்குத்தக்கதாக அவர் தண்டிப்பார்;
அவர்களுடைய செயல்களுக்கேற்றபடி அவர்களுக்குப் பிரதிபலன் செய்வார்.
3யாக்கோபு தாயின் கர்ப்பத்திலேயே,
தனது சகோதரனின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டான்;
மனிதனானபோது இறைவனோடு போராடினான்.
4அவன் தூதனுடனும் போராடி வெற்றிகொண்டான்;
அவன் அவருடைய தயவுக்காக அழுது மன்றாடினான்.
இறைவன் அவனைப் பெத்தேலில் கண்டு,
அங்கே நம்முடன் பேசினார்.
5சேனைகளின் இறைவனாகிய யெகோவா அவரே;
யெகோவா என்பது அவரது புகழ்வாய்ந்த பெயர்.
6யாக்கோபின் மக்களே, நீங்கள் எல்லோரும் இறைவனிடம் திரும்பிவாருங்கள்.
அன்பையும் நீதியையும் கடைபிடியுங்கள்;
எப்பொழுதும் உங்கள் இறைவனுக்காகக் காத்திருங்கள்.
7ஆனால் இப்பொழுது நீங்கள் கள்ளத்தராசுகளைப் பயன்படுத்துகிற
வியாபாரிபோல் இருக்கிறீர்கள்;
அவன் ஏமாற்றுவதையே விரும்புகிறான்.
8அத்துடன் எப்பிராயீமோ,
“நான் மிகவும் பணக்காரன்; நான் செல்வந்தனாகிவிட்டேன்.
என் செல்வத்தினிமித்தம் அவர்கள் என்னில்
அநியாயத்தையோ, பாவத்தையோ கண்டுபிடிக்க முடியாது என்று பெருமைப்படுகிறான்.”
9“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த
உங்கள் இறைவனாகிய யெகோவா நானே.
நான் உங்களது நியமிக்கப்பட்ட பண்டிகையின் நாட்களில் இருப்பதுபோல,
நான் திரும்பவும் உங்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணுவேன்.
10அத்துடன் நான் இறைவாக்கினருடன் பேசி,
அவர்களுக்கு அநேக தரிசனங்களைக் கொடுத்தேன்;
அவர்களைக்கொண்டு உவமைகளினால் பேசினேன்.”
11கீலேயாத் கொடுமையானதா?
அதன் மக்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்;
கில்காலில் காளைகளைப் பலியிடுகிறார்களா?
அவர்களுடைய பலிபீடங்கள் உழுத வயலிலுள்ள
கற்குவியலைப்போல் ஆகும்.
12யாக்கோபு ஆராமுக்கு ஓடிப்போனான்;
இஸ்ரயேல் தனக்கு மனைவியைப் பெறுவதற்காக வேலைசெய்தான்;
அவளுக்கான பணத்தைக் கொடுப்பதற்கு செம்மறியாடுகளை மேய்த்தான்.
13யெகோவா இறைவாக்கினன் ஒருவனை அனுப்பி,
இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்;
இறைவாக்கினன் மூலம் இஸ்ரயேலரை பராமரித்தார்.
14ஆயினும் எப்பிராயீம் யெகோவாவுக்குக் கசப்பாகக் கோபமூட்டியிருக்கிறான்;
எனவே அவனுடைய யெகோவா, அவனுடைய இரத்தப்பழியை அவன் மேலேயே சுமத்துவார்.
அவன் காட்டிய அவமதிப்புக்குத்தக்கதாய் அவனுக்குப் பதில் செய்வார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஓசியா 12: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.