ஏசாயா 35
35
மீட்கப்பட்டோரின் மகிழ்ச்சி
1பாலைவனமும் வறண்ட நிலமும் மகிழும்.
வனாந்திரம் மகிழ்ந்து பூக்கும்.
அது லீலி பூப்பதுபோல் பூக்கும். 2அது வளமாய் வளர்ந்து
மகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிடும்.
லெபனோனின் மகிமையும்,
கர்மேல், சாரோனின் சிறப்பும் அதற்குக் கொடுக்கப்படும்.
யெகோவாவின் மகிமையையும்,
நமது இறைவனின் மகத்துவத்தையும் காண்பார்கள்.
3தளர்ந்த கைகளைப் பலப்படுத்துங்கள்,
தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்துங்கள்.
4இருதயத்தில் பதற்றமுள்ளோருக்கு,
“திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள்;
இதோ, உங்கள் இறைவன்
உங்கள் பகைவரை பழிதீர்க்கவும்,
பதிலளிக்கவும் வருவார்,
அவர் வந்து உங்களை விடுவிப்பார்” என்று சொல்லுங்கள்.
5அப்பொழுது குருடரின் கண்கள் பார்வை பெறும்,
செவிடரின் காதுகளும் திறக்கப்படும்.
6முடவன் மானைப்போல் துள்ளுவான்,
ஊமையின் நாவும் ஆனந்த சத்தமிடும்;
வனாந்திரத்திலிருந்து தண்ணீரும்,
பாலைவனத்திலிருந்து நீரோடைகளும் பாயும்.
7சுடுமணல் நீர்த் தடாகமாகும்,
வறண்ட நிலம் நீரூற்றுகளுமாய் பொங்கிவரும்.
நரிகள் தங்கும் இடங்களில்
புல்லும், கோரையும், நாணலும் வளர்ந்து நிற்கும்.
8அங்கே பிரதான வீதி ஒன்றிருக்கும்,
அது பரிசுத்த வழி எனப்படும்.
அசுத்தர் அதன் வழியே கடந்து செல்லமாட்டார்கள்.
இறைவனுடைய வழியில் நடப்பவர்களுக்கென்றே அது இருக்கும்.
கொடிய மூடர் அதில் திரியமாட்டார்கள்.
9அங்கு சிங்கம் இருப்பதில்லை;
எந்தவொரு கொடிய மிருகமாவது அங்கே செல்வதில்லை,
அங்கே காணப்படுவதுமில்லை.
மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
10யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள்.
அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்;
நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும்.
மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடைவார்கள்,
துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஏசாயா 35: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.