ஏசாயா 46
46
பாபிலோனின் தெய்வங்கள்
1பேல்#46:1 பேல் பாபிலோனின் பிரதான கடவுள்களில் ஒன்று. அது மர்துக் என்றும் அழைக்கப்படும். நேபோ மற்றொன்று; அது மர்துக்கின் மகன். தெய்வம் தலை கவிழ்கிறது;
நேபோ தெய்வம் குப்புற விழுகிறது.
அவர்களுடைய விக்கிரகங்கள் சுமை சுமக்கும் மிருகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன;
ஊர்வலத்தில் சுமக்கப்பட்ட அந்த விக்கிரகங்கள்
இப்பொழுது களைத்துப்போன மிருகங்களுக்கு மிகவும் பாரமாயிருக்கின்றன.
2அவை ஒன்றாய் குப்புற விழுகின்றன.
அந்த உருவச்சிலைகள் தங்களைச் சுமக்கும் மிருகங்களைத் தப்புவிக்கும் ஆற்றலின்றி
தாங்களும் சிறைப்பட்டுப் போகின்றன.
3“யாக்கோபின் குடும்பமே, இஸ்ரயேல் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களே,
நீங்கள் அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள்;
நீங்கள் கருவில் உருவானதுமுதல் நான் உங்களைத் தாங்கினேன்,
நீங்கள் பிறந்ததுமுதல் நான் உங்களைச் சுமந்தேன்.
4நீங்கள் முதிர்வயது அடைந்து, உங்களுக்கு நரைமயிர் உண்டாகும் காலத்திலும்,
உங்களைத் தாங்கப்போகிறவர் நானே.
உங்களைப் படைத்த நானே உங்களைச் சுமப்பேன்.
நானே உங்களைத் தாங்குவேன், நானே உங்களைக் காப்பாற்றுவேன்.
5“என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக எண்ணுவீர்கள்?
என்னை ஒப்பிடுவதற்கு யாரை எனக்கு ஒப்பிடுவீர்கள்?
6சிலர் தங்கள் பைகளிலிருந்து தங்கத்தை அள்ளிக்கொட்டி,
தராசுகளில் வெள்ளியை நிறுக்கிறார்கள்;
அதை ஒரு தெய்வமாகச் செய்யும்படி அவர்கள் ஒரு கொல்லனை கூலிக்கு அமர்த்துகிறார்கள்;
பின் அவர்கள் தாழ்ந்து வீழ்ந்து அதை வணங்குகிறார்கள்.
7அதைத் தமது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்கள்.
அவர்கள் அதை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்கள்.
அது அங்கேயே நிற்கிறது, அந்த இடத்திலிருந்து அதனால் நகரமுடியாது.
ஒருவன் அதை நோக்கி அழுதாலும் அது பதிலளிப்பதில்லை;
ஒருவனை அவனுடைய துன்பங்களிலிருந்து காப்பாற்ற அதனால் இயலாது.
8“கலகக்காரரே, இதை நினைவில்கொள்ளுங்கள்.
இதை மனதில் பதித்து வையுங்கள்.
9முந்தி நிகழ்ந்த பூர்வீகக் காரியங்களை நினைத்துப் பாருங்கள்;
நானே இறைவன், வேறொருவர் இல்லை;
நானே இறைவன், என்னைப்போல் ஒருவரும் இல்லை.
10நான் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிவிக்கிறவர்,
முற்காலங்களிலேயே வரப்போகிறதை அறிவிக்கின்றவர்.
‘என் நோக்கம் நிலைநிற்கும்;
நான் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன்’ என்று நான் சொல்கிறேன்.
11நான் கிழக்கிலிருந்து இரைதேடும் பறவையை அழைப்பிக்கின்றேன்.
தூரதேசத்திலிருந்து என் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு மனிதனை அழைப்பிக்கின்றேன்.
நான் என்ன சொன்னேனோ அதை நிறைவேற்றுவேன்;
நான் எதைத் திட்டமிட்டேனோ அதைச் செய்வேன்.
12பிடிவாத இருதயமுள்ள நீதிக்குத் தூரமானவர்களே!
எனக்குச் செவிகொடுங்கள்.
13நானே எனது நீதியை அருகில் கொண்டுவருகிறேன்,
அது வெகுதூரத்தில் இல்லை;
எனது இரட்சிப்பு தாமதம் அடையாது.
நான் சீயோனுக்கு இரட்சிப்பையும்,
இஸ்ரயேலுக்கு எனது சிறப்பையும் கொடுப்பேன்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஏசாயா 46: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.