நீதிமொழி 19:13-29

நீதிமொழி 19:13-29 TCV

மதிகெட்ட மகன் தன் தகப்பனுக்கு அழிவு; வாக்குவாதம் செய்யும் மனைவி, ஓட்டைக் கூரையிலிருந்து ஓயாமல் ஒழுகும் நீரைப்போல் இருக்கிறாள். வீடுகளும் செல்வமும் பெற்றோரிடமிருந்து உரிமைச்சொத்தாய் கிடைக்கின்றன; ஆனால் விவேகமுள்ள மனைவியோ யெகோவாவிடமிருந்து கிடைக்கிறாள். சோம்பல் ஆழ்ந்த நித்திரையைக் கொண்டுவரும். வேலைசெய்ய மறுப்பவர்கள் பசியாயிருப்பார்கள். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்; ஆனால் தங்கள் வழிகள்மேல் கவனமாயிராதவர்கள் சாவார்கள். ஏழைக்கு உதவுகிறவர்கள் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறார்கள், அவர்கள் உதவியதற்கு சரியாக அவர்களுக்கு திரும்பக் கொடுப்பார். உன் பிள்ளைகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கும்போதே கண்டித்துத் திருத்து; இல்லாவிட்டால் நீ அவர்களின் வாழ்க்கை அழிய காரணமாகி விடுவாய். முற்கோபமுள்ள மனிதர் தனக்குரிய தண்டனையைப் பெறவேண்டும்; அவரைத் தப்புவித்தால், திரும்பவும் தப்புவிக்க வேண்டிவரும். ஆலோசனையைக் கேட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்; முடிவில் நீ ஞானமுள்ளவராவாய். மனிதனின் இருதயத்தின் திட்டங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவின் நோக்கமே நிறைவேறுகிறது. எல்லோரும் நேர்மையான அன்பையே விரும்புகிறார்கள்; பொய்யராய் இருப்பதைவிட ஏழையாய் இருப்பது சிறந்தது. யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்விற்கு வழிநடத்தும்; அவ்வாறு இருந்தால் பிரச்சனை இல்லாமல், மனநிறைவுடன் இருக்கலாம். சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; ஆனால் அதைத் தங்கள் வாய்க்குக்கூட கொண்டுபோகமாட்டார்கள். ஏளனம் செய்பவர்களுக்கு அடி கிடைக்கும், அப்பொழுது அறிவற்றவர்கள் விவேகத்தைக் கற்றுக்கொள்வார்கள்; பகுத்தறிவுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள்மேலும் அறிவைப் பெறுவார்கள். தங்கள் தகப்பனின் பொருட்களை அபகரித்து, தங்கள் தாயைத் துரத்திவிடுகிறார்கள் வெட்கமும் அவமானமும் கொண்டுவருகிற பிள்ளைகள். என் பிள்ளையே, நீ அறிவுரைகளைக் கேட்பதை நிறுத்தினால், அறிவுள்ள வார்த்தைகளிலிருந்து விலகிப்போவாய். சீர்கெட்ட சாட்சி நீதியைக் கேலி செய்கிறது, கொடியவர்களின் வாயோ தீமையை விழுங்குகிறது. ஏளனம் செய்வோருக்கு தண்டனையும், மூடருடைய முதுகிற்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.