சங்கீதம் 40
40
சங்கீதம் 40
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார்.
2அழிவின் குழியிலிருந்தும்
மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார்,
அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி,
நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார்.
3எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான
புதுப்பாட்டை அவர் என் வாயிலிருந்து வரச்செய்தார்.
அநேகர் அதைக்கண்டு பயந்து,
யெகோவாவிடம் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.
4பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும்,
அகந்தை உள்ளவர்களைச் சாராமலும்,
யெகோவாவைத் தனது நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
5என் இறைவனாகிய யெகோவாவே,
நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும்
உம்முடைய திட்டங்களும் அநேகம்.
உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை;
அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால்,
அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள்.
6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை;
தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை;
ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர்.
7அப்பொழுது நான், “இதோ, நான் வருகிறேன்;
புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே.
8என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்;
உமது சட்டம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்னேன்.
9மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்;
யெகோவாவே, நீர் அறிந்திருக்கிறபடி
நான் என் உதடுகளை மூடுவதில்லை.
10நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை;
உமது உண்மையையும்,
இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன்.
உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை.
11யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்;
உமது உடன்படிக்கையின் அன்பும் உமது உண்மையும் எப்போதும் என்னைப் பாதுகாப்பதாக.
12ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன;
என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன்.
என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை;
அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
13யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்;
யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
14என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும்
வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக;
எனது அழிவை விரும்புகிற யாவரும்
அவமானமடைந்து திரும்புவார்களாக.
15என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள்
அவர்களுடைய வெட்கத்தினால் நிலைகுலைந்து போவார்களாக.
16ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும்
உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக;
உமது இரட்சிப்பை விரும்புவோர், “யெகோவா பெரியவர்!”
என்று எப்போதும் சொல்வார்களாக.
17நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்;
யெகோவா என்னை நினைப்பாராக.
நீரே என் துணை, நீரே என் மீட்பர்;
என் இறைவனே, தாமதியாதேயும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங்கீதம் 40: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.