ஆமோஸ் 8:7-14

ஆமோஸ் 8:7-14 TAERV

கர்த்தர் ஒரு வாக்குறுதி செய்தார். அவர் யாக்கோபின் பெருமை, என்ற தமது நாமத்தை, பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார். “நான் அந்த ஜனங்கள் செய்தவற்றை மறக்கமாட்டேன். அவற்றால் முழு நாடும் நடுங்கும். இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் மரித்துப்போனவர்களுக்காக அழுவார்கள். முழு நாடும் எகிப்திலுள்ள நைல் நதியைப் போன்று உயர்ந்து தாழும். இந்த நாடு தடுமாறிப் போகும்.” கர்த்தர் இவற்றையும் கூறினார்: “அந்த வேளையில் நான் சூரியனை நடுப்பகலில் மறையச் செய்வேன். நான் பகல் வேளையில் பூமியை இருளச் செய்வேன். நான் உங்கள் விடுமுறை நாட்களை மரித்தவர்களுக்காக ஒப்பாரி வைக்கும் நாளாக்குவேன். உங்கள் பாடல்கள் எல்லாம் மரித்த ஜனங்களுக்காகப் பாடப்படும் சோகப் பாடல்களாகும். நான் ஒவ்வொருவர் மீதும் துக்கத்திற்கான ஆடையை அணிவிப்பேன். நான் எல்லாத் தலைகளையும் வழுக்கையாக்குவேன். நான், மரித்துப்போன ஒரே மகனுக்காக அழும் ஒப்பாரியைப் போன்று ஆக்குவேன். இது ஒரு மிகவும் கசப்பான முடிவாயிருக்கும்.” கர்த்தர் கூறுகிறார்: “பார், தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும். ஜனங்கள் அப்பத்துக்காகப் பசித்திருக்கமாட்டார்கள். தண்ணீருக்காகத் தவித்திருக்கமாட்டார்கள். இல்லை, கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளுக்காக ஜனங்கள் பசியோடு இருப்பார்கள். ஜனங்கள் சவக்கடலிலிருந்து மத்தியத் தரைக் கடலுக்கும் வடக்கிலிருந்து கிழக்குக்கும் அலைவார்கள். ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக அங்கும் இங்கும் அலைவார்கள். ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். அந்த நேரத்தில் அழகான ஆண்களும் பெண்களும் தாகத்தால் பலவீனம் அடைவார்கள். அந்த ஜனங்கள் சமாரியாவின் பாவத்தின் பேரில் வாக்குறுதி செய்தனர். அவர்கள், ‘தாணே, உன் தேவனுடைய உயிரின் மேல் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள். மேலும் அவர்கள், ‘பெயர்செபாவின் தேவனுடைய உயிரின்மேல் நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள். ஆனால் அந்த ஜனங்கள் வீழ்வார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஆமோஸ் 8:7-14