ஆமோஸ் 8:7-14

ஆமோஸ் 8:7-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார். இதினிமித்தம் தேசம் அதிரவும் அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ? அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி, உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசைதொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள். அந்நாளிலே சௌந்தரியமுள்ள கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள். தாணே! உன் தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் தோஷத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.

ஆமோஸ் 8:7-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யாக்கோபின் அகந்தையின்மீது யெகோவா ஆணையிட்டார்: “அவர்கள் செய்த செயல்கள் எதையும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். “இதனால் நாடு நடுங்காதோ, அதில் வாழும் அனைவரும் துக்கப்பட மாட்டார்களோ? நாடு முழுவதும் நைல் நதிபோல பொங்கும். அது குமுறிப் பொங்கி, பின் அது எகிப்து நதியைப்போல் தணிந்துபோகும்.” ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறதாவது: “அந்நாளில் நான் நண்பகலில் சூரியனை மறையச் செய்வேன், பட்டப்பகலில் பூமியை இருளடையச் செய்வேன். உங்கள் மதக்கொண்டாட்டங்களை துக்கக்கொண்டாட்டமாகவும், உங்கள் பாடல்களை அழுகையாகவும் மாற்றுவேன். உங்கள் அனைவரையும் துக்கவுடை உடுத்தச் செய்வேன். உங்களை மொட்டையடிக்கப் பண்ணுவேன். நான் அந்த காலத்தை ஒரே மகனுக்காக துக்கங்கொண்டாடும் காலத்தைப்போல் மாற்றுவேன். அதன் முடிவை ஒரு கசப்பான நாளைப்போல் ஆக்குவேன் என்கிறார். “மேலும் ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறதாவது: நாட்கள் வருகின்றன, நாடெங்கும் பஞ்சத்தை அனுப்புவேன். அது உணவு கிடைக்காத பஞ்சமோ, தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காத பஞ்சமோ அல்ல. மாறாக யெகோவாவினுடைய வார்த்தைகளைக் கேட்க முடியாத பஞ்சமே அது. அப்போது மனிதர், ஒரு கடல் தொடங்கி மறுகடல் வரையும் அலைந்து சென்று, வடதிசை தொடங்கி, கீழ்த்திசை வரையும் அலைந்து திரிந்து, யெகோவாவின் வார்த்தையைத் தேடுவார்கள். ஆனால் அதைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். “அந்த நாளில் “அழகிய இளம்பெண்களும், வலிமையுள்ள வாலிபர் எல்லோருமே தாகத்தால் சோர்ந்துபோவார்கள். அக்காலத்தில் சமாரியாவின் வெட்கக்கேடான விக்கிரகங்களின்மேல் ஆணையிடுகிறவர்களோ, அல்லது ‘தாணே, உனது தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’ என்று சொல்லுகிறவர்களோ, அல்லது ‘பெயெர்செபாவின் தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’ என்று சொல்லுகிறவர்களோ எல்லோரும் விழுந்துபோவார்கள், அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள்.”

ஆமோஸ் 8:7-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று யெகோவா யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார். இதனால் தேசம் அதிரவும் அதில் குடியிருக்கிறவர்கள் எல்லோரும் துக்கிக்கவும், எங்கும் நதிகளாகப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ? அந்த நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை மறையச்செய்து, பட்டப்பகலிலே தேசத்தை இருளாக்கி, உங்களுடைய பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்களுடைய பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாறச்செய்து, எல்லா இடுப்புகளிலும் சணல் ஆடையும், எல்லாத் தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, தண்ணீர்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, யெகோவாவுடைய வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சத்தை அனுப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரம் துவங்கி மறு சமுத்திரம்வரை, வடக்குதிசை துவங்கிக் கிழக்குத்திசைவரை அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமல்போவார்கள். அந்த நாளிலே அழகுள்ள கன்னிகளும் வாலிபர்களும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள். தாணே! உன்னுடைய தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் பாவத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.

ஆமோஸ் 8:7-14 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் ஒரு வாக்குறுதி செய்தார். அவர் யாக்கோபின் பெருமை, என்ற தமது நாமத்தை, பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார். “நான் அந்த ஜனங்கள் செய்தவற்றை மறக்கமாட்டேன். அவற்றால் முழு நாடும் நடுங்கும். இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் மரித்துப்போனவர்களுக்காக அழுவார்கள். முழு நாடும் எகிப்திலுள்ள நைல் நதியைப் போன்று உயர்ந்து தாழும். இந்த நாடு தடுமாறிப் போகும்.” கர்த்தர் இவற்றையும் கூறினார்: “அந்த வேளையில் நான் சூரியனை நடுப்பகலில் மறையச் செய்வேன். நான் பகல் வேளையில் பூமியை இருளச் செய்வேன். நான் உங்கள் விடுமுறை நாட்களை மரித்தவர்களுக்காக ஒப்பாரி வைக்கும் நாளாக்குவேன். உங்கள் பாடல்கள் எல்லாம் மரித்த ஜனங்களுக்காகப் பாடப்படும் சோகப் பாடல்களாகும். நான் ஒவ்வொருவர் மீதும் துக்கத்திற்கான ஆடையை அணிவிப்பேன். நான் எல்லாத் தலைகளையும் வழுக்கையாக்குவேன். நான், மரித்துப்போன ஒரே மகனுக்காக அழும் ஒப்பாரியைப் போன்று ஆக்குவேன். இது ஒரு மிகவும் கசப்பான முடிவாயிருக்கும்.” கர்த்தர் கூறுகிறார்: “பார், தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும். ஜனங்கள் அப்பத்துக்காகப் பசித்திருக்கமாட்டார்கள். தண்ணீருக்காகத் தவித்திருக்கமாட்டார்கள். இல்லை, கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளுக்காக ஜனங்கள் பசியோடு இருப்பார்கள். ஜனங்கள் சவக்கடலிலிருந்து மத்தியத் தரைக் கடலுக்கும் வடக்கிலிருந்து கிழக்குக்கும் அலைவார்கள். ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக அங்கும் இங்கும் அலைவார்கள். ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். அந்த நேரத்தில் அழகான ஆண்களும் பெண்களும் தாகத்தால் பலவீனம் அடைவார்கள். அந்த ஜனங்கள் சமாரியாவின் பாவத்தின் பேரில் வாக்குறுதி செய்தனர். அவர்கள், ‘தாணே, உன் தேவனுடைய உயிரின் மேல் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள். மேலும் அவர்கள், ‘பெயர்செபாவின் தேவனுடைய உயிரின்மேல் நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள். ஆனால் அந்த ஜனங்கள் வீழ்வார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.”