சாலொமோனின் உன்னதப்பாட்டு 1

1
1இது சாலொமோனின் மிகவும் அற்புதமான பாடல்
பெண் தான் நேசிக்கிற மனிதனுக்கு
2என்னை முத்தங்களால் மூடிவிடும்.
திராட்சைரசத்தைவிட உமது அன்பு சிறந்தது.
3உமது வாசனைத் திரவியங்கள் அற்புதமானவை,
ஆனால் உமது நாமம் சிறந்த வாசனைப் பொருட்களைவிட இனிமையானது.
அதனால்தான் இளம் பெண்கள் உம்மை விரும்புகின்றனர்.
4என்னை உம்மோடு சேர்த்துக்கொள்ளும்.
நாம் ஓடிவிடுவோம்.
ராஜா என்னைத் தன் அறைக்கு எடுத்துச்சென்றார்.
எருசலேமின் பெண்கள் மனிதனுக்கு
நாங்கள் உம்மில் களிப்படைந்து மகிழ்வோம்.
திராட்சைரசத்தைவிட உமது அன்பு சிறந்தது என்பதை மனதில்கொள்ளும். நல்ல காரணங்களுக்காகவே இளம்பெண்கள் உம்மை விரும்புகின்றனர்.
அவள் பெண்களோடு பேசுகிறாள்
5எருசலேமின் குமாரத்திகளே, கேதார் மற்றும் சாலொமோனின் கூடாரங்களைப்போல நான் கறுப்பாகவும்,
அழகாகவும் இருக்கிறேன்.
6நான் எவ்வளவு கறுப்பென்று பார்க்கவேண்டாம்.
வெய்யில் என்னை இவ்வளவு கறுப்பாக்கிவிட்டது.
என் சகோதரர்கள் என் மீது கோபம் அடைந்தார்கள்.
அவர்களின் திராட்சைத் தோட்டங்களைக் கவனிக்கும்படி என்னைக் கட்டாயப்படுத்தினர்.
எனவே என்னை நானே கவனித்துக்கொள்ள முடியவில்லை.
அவள் அவனிடம் பேசுகிறாள்
7நான் என் முழு ஆத்துமாவோடும் உம்மை நேசிக்கிறேன்.
எனக்குச் சொல்லும்; உமது மந்தையை எங்கே மேயவிடுகிறீர்?
மதியானத்தில் அதனை எங்கே இளைப்பாறச் செய்வீர்?
நான் உம்மோடு இருக்க வரவேண்டும்.
அல்லது உமது நண்பர்களின் மந்தைகளைப் பராமரிப்பதற்கு அமர்ந்தப்பட்ட பெண்ணைப்போல் இருப்பேன்.
அவன் அவளோடு பேசுகிறான்
8நீ எவ்வளவு அழகான பெண்
என்ன செய்ய வேண்டுமென்று உனக்கு நிச்சயமாய் தெரியும்.
மந்தையைப் பின்தொடர்ந்து போ.
மேய்ப்பர்களின் கூடாரத்தினருகே இளம் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
9என் அன்பே! பார்வோனின் இரதங்களில் பூண்டிய
ஆண்குதிரைகளுக்குக் கிளர்ச்சியூட்டும் பெண் குதிரையைவிட நீ என்னைக் கிளர்ச்சியூட்டி மகிழ்விக்கிறாய்.
அக்குதிரைகள் தங்கள் முகத்தின் பக்கவாட்டிலும் கழுத்தை சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
10-11பொன்னாலான தலையணியும் வெள்ளியாலான கழுத்துமாலையும் உனக்குரிய அலங்காரங்களாயிருக்கின்றன.
உனது கன்னங்கள் மிக அழகானவை.
அவை பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
உனது கழுத்தும் மிக அழகானது.
அது வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அவள் பேசுகிறாள்
12எனது வாசனைப்பொருளின் மணமானது
கட்டிலின்மேல் இருக்கும் ராஜாவையும் சென்றடைகிறது.
13என் நேசர் என் கழுத்தை சுற்றிலும் கிடந்து இரவில் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் வெள்ளைப்போளப் பையைப் போன்றவர்.
14என் நேசர் எனக்கு எங்கேதி திராட்சைத் தோட்டங்களில் முளைத்துள்ள மருதோன்றிப் பூங்கொத்துப் போன்றவர்.
அவன் பேசுகிறான்
15என் அன்பே, நீ மிகவும் அழகானவள்.
ஓ … நீ மிக அழகானவள் உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றவை.
அவள் பேசுகிறாள்
16என் நேசரே! நீரும் மிக அழகானவர்
நீர் மிகவும் கவர்ச்சியானவர்.
நமது படுக்கை புதியதாகவும், மனதை மகிழ்விப்பதாகவும் உள்ளது.
17நமது வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரங்களாலானவை.
நமது மேல்வீடு தேவதாரு மரத்தாலானவை.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சாலொமோனின் உன்னதப்பாட்டு 1: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்