தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

இதுவரை நடந்த விருந்துகளில் மிகவும் மோசமானது
நான் நெதர்லாந்திலிருந்து வந்தவள் என்பதால் என்னை டச்சு பெண்மணி என்று முன்பு குறிப்பிட்டிருக்கிறேன். (அது உங்களுக்குத் தெரியாது என்றால் நான் உங்களைக் குறை சொல்லமாட்டேன்; குழப்பமாக இருப்பது எனக்குப் புரிகிறது).
ஆனால், நாங்கள் சந்திப்பதற்குப் பல வருடங்களுக்கு முன்பதாகவே, கேம்ரன் நெதர்லாந்துக்குச் சென்ற கதை உங்களுக்குத் தெரியாது. அதுதான் இந்தியாவின் வெளியிலான அவருடைய முதல் பயணம். அதுவரை, மேலை நாடுகள் பற்றி அவர் திரைப்படங்கள் மூலம் மட்டுமே தெரிந்து வைத்திருந்தார்.
அதனால், அவர் அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்தார் என்பது இயற்கையே.
சிறப்பான உணவு என்பது ஆடம்பரமான விருந்தைக் குறிக்கும் இந்திய விருந்தோம்பலுக்குப் பழக்கப்பட்டிருந்த கேம்ரன், மேலை நாடுகளின் உணவு இன்னும் ஆடம்பரமாக இருக்கும் என்று நினைத்தார். அங்கு எல்லா இடங்களிலும் டைட்டானிக் பாணி உணவு பரப்புகள் இருக்கும் என்று கற்பனை செய்தார்.
அதனால், நெதர்லாந்தில் அவர் சாப்பிட்ட முதல் மதிய உணவில், அவருக்கு ஒரு சாதாரண சீஸ் சாண்ட்விச் கொடுக்கப்பட்டபோது அவர் ஏமாற்றமடைந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் (ஒரு டச்சு பெண்மணியாக, நான் ஒரே நேரத்தில் வேடிக்கையாகவும் கொஞ்சம் வெட்கமாகவும் உணர்கிறேன். 🙈).
கேம்ரன் மனத்தில் இருந்த உணவு, கெட்ட குமாரன் உவமையில் (லூக்கா 15:11-32 TAOVBSI) இயேசு விவரித்த விருந்துக்கு ஒத்ததாக இருந்திருக்கும்.
தொலைந்து போன மகன் வீட்டிற்குத் திரும்பியபோது, தந்தை ஒரு பெரிய கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த உவமையில் வரும் விருந்து, உலகத்தின் முடிவில் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காகத் தயாரித்திருக்கும் மாபெரும், மகிழ்ச்சியான விருந்தைக் குறிக்கிறது:
"அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்." - மத்தேயு 8:11 TAOVBSI.
உணவு விஷயத்தில், தேவன் டச்சுக்காரரை விட இந்தியரைப் போலவே இருக்கிறார் என்று நினைக்கிறேன். 😉
ஆனால் வேடிக்கையாகச் சொன்னது இருக்கட்டும், உணவு என்பது சமூகம், கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. அது நடைமுறை மற்றும் தனிப்பட்டது. நம் தேவனும் அப்படித்தான். அவர் ஒரு தந்தை, தம்முடைய அன்பான பிள்ளைகளை வீட்டிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறார்.
"சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்." - ஏசாயா 25:6 TAOVBSI
இந்த விருந்தில் உங்களுக்காக ஒரு இடம் காத்திருக்கிறதா என்பதில் உங்கள் இதயத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால், நீங்கள் தேவனுடைய பிள்ளையா என்பது உங்களுக்குத் தெரியவில்லையென்றால்—அதாவது, கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் கிருபையால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா என்பதில் உறுதியாக இல்லையென்றால்: இதில் ஒரு இடத்தை பிடிக்க இன்றே உங்களுக்கு சிறந்த நாள்!
இந்த ஜெபத்தைச் சொல்லுங்கள்:
அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, என்னுடைய பாவங்களுக்காக நீர் மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்தீர் என்று நான் நம்புகிறேன். என்னுடைய பாவங்களை விட்டு விலகி, என்னுடைய இருதயத்திலும் வாழ்க்கையிலும் நீர் வரும்படி உம்மை அழைக்கிறேன். என்னுடைய ஆண்டவராகவும் இரட்சகராகவும் உம்மை ஏற்றுக்கொள்கிறேன். உம்முடைய நாமத்தில், ஆமென்.
நீங்கள் ஒரு அதிசயம்!
Jenny Mendes
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net

