கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்மாதிரி

புறப்படுங்கள்
“கட்டளையிடும்” என்று சொல்லும் துணிச்சல்
பேதுரு கேட்டுகொண்டது அசாதாரணமான ஒன்று என்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? கடுமையான புயலின் மத்தியில், எல்லோரும் ஓரளவுக்குப் பாதுகாப்பாக இருந்த தங்கள் படகைப் பற்றிக் கொண்டிருந்த நிலையில், பேதுரு சற்று வித்தியாசமான ஒன்றைக் கண்டார். இயற்கை விதிகளுக்கும், மனிதனின் காரணமறியும் அறிவுக்கும் அப்பாற்பட்டு இயேசுவோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைக் கண்டார்.
“ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும்” என்று பேதுரு சொன்ன இந்த வார்த்தைகள், விசுவாசத்தில் அடியெடுத்து வைப்பதற்கான மூன்று வல்லமையான அம்சங்களை வெளிப்படுத்துகின்றன:
உணர்ந்து அறிதல் (“நீரேயானால்”) – பேதுரு இயேசுவின் பிரசன்னத்தை உறுதி செய்ய நாடினார்.
ஒப்புவித்தல் (“கட்டளையிடும்”) – இயேசுவின் அதிகாரத்தின் கீழ் தன்னை ஒப்புவித்தார்.
பாதை (“உம்மிடத்தில் வர”) – அவர் விசுவாசத்தில் இறங்கி நடந்ததற்குத் தெளிவான ஒரு நோக்கமும், செல்லுமிடமும் இருந்தன.
சிந்தனைக்கு: இயேசுவைத் தம்மிடம் வரும்படி பேதுரு கேட்கவில்லை. வித்தியாசமான ஒரு அற்புதம் வேண்டுமென்றும் கேட்கவில்லை. இயேசுவோடு இருப்பதற்கு ஆபத்தான காரியத்தைச் செய்ய வேண்டியதாக இருந்தாலும் பரவாயில்லை என்னும் ஆழமான சத்தியத்தை விளங்கிக் கொண்டிருந்ததால், சாத்தியமற்ற ஒரு சூழ்நிலைக்குள் கடந்து வரும்படித் தனக்குக் கட்டளையிடச் சொன்னார்.
உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியில் இயேசு உங்களை “வா” என்று அழைக்கிறார்?
எந்த சவுகரியப் படகை விட்டு இறங்கும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது?
கீழ்ப்படிவதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலைகளுக்காகக் காத்திருக்கிறீர்களா?
நீங்கள் தயங்கிக் கொண்டிருக்கும் பகுதிகளில் கடந்து செல்வதற்கு, “கட்டளையிடும்” என்று கேட்கும் துணிச்சலை அவரிடமே கேளுங்கள்.
தனிப்பட்ட பயன்பாடு:
நீங்கள் ஜெபிக்கிறதான “கட்டளையிடும்” என்னும் ஜெபத்தை எழுதவும். அதில் பின்வருவனவற்றைக் குறிப்பிடவும்:
நீங்கள் தற்போது இருக்கும் சவுகரியமான படகு
நீங்கள் நடக்கும்படி இயேசு அழைக்கும் “தண்ணீர்”
நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பயங்கள்
நீங்கள் எடுத்து வைக்க வேண்டிய முதல் அடி
சிந்தனைக்கான கேள்விகள்:
பேதுரு உடனடியாக இயேசுவுக்குக் கீழ்ப்படிந்தது எதை உணர்த்துகிறது?
மற்ற சீஷர்கள் ஏன் படகில் தங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறீர்கள்?
தேவனுடைய அழைப்புக்கு நீங்கள் கீழ்ப்படிவதை பேதுருவின் கீழ்ப்படிதலோடு எப்படி ஒப்பிடுவீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

“கட்டளையிடும்!” பொங்கி எழுந்த கடலலைகள் மத்தியில், புயலில் சிக்கி அலைமோதிய படகிலிருந்து இறங்கிய பேதுருவின் வாழ்க்கையை மாற்றியது இந்த வார்த்தை. படகிலிருந்து இயேசு இருக்கும் இடத்தை நோக்கிச் சென்ற அவரது பயணம், விசுவாசம், கவனம் மற்றும் மாற்றத்தைப் பற்றிய காலத்திற்கு அப்பாற்பட்ட சத்தியங்களை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் அழைப்பை அறிதல், விசுவாசத்தினால் பயத்தை மேற்கொள்ளுதல் மற்றும் அசையாமல் அவரையே நோக்கிப் பார்த்தல் ஆகிய காரியங்களில் உங்களை வழிநடத்தும்படி இந்த 4-நாள் தியானம் மத்தேயு 14:28-33 வசனங்களின்படி அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் படகின் விளிம்பில் இருந்தாலும், தண்ணீர் மேல் நடக்கக் கற்றுக்கொண்டிருந்தாலும், சாதாரண விசுவாசிகள் “கட்டளையிடும்” என்று தைரியமாகச் சொல்லும்போது என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Zero க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.zeroconferences.com/india