தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

நன்றிப்பாட்டு
டக்ளஸ் மனோதத்துவ மருத்துவராக அதிகம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஊழியத்திற்காக அதை விட்டுவிட்டார். அவரது மனைவியை மூன்று இடங்களில் புற்று நோய் தாக்கியது. கார் விபத்தில் மாட்டியதால் 12 வயது மகளின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன ஒரு கை முறிந்தது. டக்ளஸ் தலையிலும் அடிபட்டதால் மிகவும் பயங்கரமான தலைவலி அடிக்கடி வந்து கொண்டிருந்தது. பார்வையும் பாதிக்கப்பட்டது. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு நேரத்தில் ஒன்று இரண்டு பக்கங்களை மட்டுமே வாசிக்க முடியும்.
கடவுள் மீது அவருக்கு இருந்த வருத்தம் பற்றி எழுத்தாளர் ஃபிலிப் யான்சி கேட்ட போது சிறிது யோசித்துவிட்டு பதிலளித்தார், “உண்மையைச் சொல்வதானால் கடவுள் மேல் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. எனக்கு நடந்த சம்பவங்களால் வருத்தப்பட்டுத்தான் இருந்தேன். வாழ்க்கையில் இருக்கும் அநியாயத்தை சபித்தேன். கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தினேன். ஆனால் கடவுளும் எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக கோபமாகவும் வருத்தமாகவும் தான் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன். கடவுள் நல்லவராக இருப்பதால் நமது வாழ்க்கையும் நன்றாகத்தான் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் கடவுளுக்கும் நமது வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்கின்றது. கடவுளையும் உலக நிஜத்தையும் குழப்பிக் கொண்டால் நமக்கு கண்டிப்பாக மனவருத்தமும் ஏமாற்றமும் ஏற்படத்தான் செய்யும்.”
தனது பாடுகளைப் பற்றிச் சொல்லி, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர் என்று கடவுளிடம் கேட்கப்பட்ட கேள்வியுடன் துவங்கிய சங்கீதம், கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன் என்று சொல்லி முடிகிறது.
சிந்தனை : உலகத்தில் உபத்திரவம் உண்டு. ஆனால் கடவுள் நல்லவர் என்னும் உண்மையே நமக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறது.
ஜெபம் : ஆண்டவரே என் வாழ்வின் பாடுகளின் நடுவிலும் உம்மைப் பாடும் உள்ளத்தையும் உதடுகளையும் எனக்குத் தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org